ஊஞ்சலூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து பணம் வசூல் செய்த 3 பேர் கைது


ஊஞ்சலூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து பணம் வசூல் செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 10:00 PM GMT (Updated: 10 Jun 2018 7:24 PM GMT)

ஊஞ்சலூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து பணம் வசூல் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊஞ்சலூர்,

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் காவிரி ஆறு செல்கிறது. ஊஞ்சலூரில் இருந்து மறுகரையான நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையம் செல்ல பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பரிசல்துறை ஏலம் கண்டிபாளையத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே சென்றதால் பரிசல்கள் இயக்கமுடியவில்லை.

அதனால் ஊஞ்சலூருக்கும், கண்டிபாளையத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே வாகனங்கள் சென்று வரும் வகையில் தனியார் சிலர் பொக்லைன் மூலம் மணலை கொட்டி தற்காலிக பாலம் அமைத்தனர். அந்த பாலம் வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு 10 ரூபாயும், 4 சக்கர வாகனங்கள் செல்ல 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றபோது தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்தநிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவது நின்றதால் ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்திற்கு மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் தனியார் ஒரு சிலர் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தற்காலிக பாலத்தை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கொடுமுடி தாசில்தார் பாலசுப்பிரமணியம், துணை தாசில்தார் சண்முகம், வருவாய் ஆய்வாளர் ராஜீவ்காந்தி, கிளாம்பாடி நில வருவாய் அதிகாரி மலர்க்கொடி மற்றும் அதிகாரிகள் ஊஞ்சலூர் காவிரி ஆற்றுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்கு சிமெண்டு குழாய்களை அடியில் போட்டு தற்காலிக மணல் பாலம் அமைக்கும் பணி நடந்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிக பாலம் அகற்றப்பட்டது.

இதேபோல் ஊஞ்சலூர் அருகே உள்ள கருவேலாம்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்து தற்காலிக மணல் பாலத்தையும், வெங்கம்பூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைத்திருந்த தற்காலிக மணல் பாலத்தையும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் தரைப்பாலம் அமைத்தவர்கள் மீது கொடுமுடி மற்றும் மலையம்பாளையம் போலீசில் அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து பணம் வசூல் செய்த நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பணன் (வயது 63), கார்த்தி (30) மற்றும் வள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த கபூர்கான் (72) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story