ஊத்துக்குளி அருகே உள்ள பாறைக்குழியில் ஒடிசா வாலிபர் பிணமாக மீட்பு, போலீசார் விசாரணை


ஊத்துக்குளி அருகே உள்ள பாறைக்குழியில் ஒடிசா வாலிபர் பிணமாக மீட்பு, போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2018 10:15 PM GMT (Updated: 10 Jun 2018 8:07 PM GMT)

ஊத்துக்குளி அருகே உள்ள பாறைக்குழியில் ஒடிசா வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளியில் இருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் மேட்டுக்கடை அருகில் உள்ள பாறைக்குழியில் உள்ள தண்ணீரில் நேற்று மாலை ஆண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. மேலும் அந்த வாலிபரின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.

இதைபார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இதுபற்றி ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம் கோபால்பூர் பகுதியை சேர்ந்த சு‌ஷந்தோபெகேரா (வயது 26) என்பதும், அவர் ஊத்துக்குளி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்று தெரியவில்லை.

இதைதொடர்ந்து சு‌ஷந்தோபெகேராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சு‌ஷந்தோபெகேரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story