மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; 2 பேர் பரிதாப சாவு


மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; 2 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 10 Jun 2018 10:15 PM GMT (Updated: 10 Jun 2018 9:04 PM GMT)

பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சத்தியநாராயணன் (வயது 19). பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் ரவிச்சந்திரன் (25). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இருவரும் மோட்டார் சைக்கிளில் பென்னாகரம் சென்று விட்டு, இரவு 11 மணியளவில் ஊருக்கு திரும்பினர். பென்னாகரம் பட்டு வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது, பாலக்கோட்டில் இருந்து பென்னாகரம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

2 பேர் பரிதாப சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சத்தியநாராயணன், ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story