பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 16 பேர் கைது


பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 16 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2018 10:30 PM GMT (Updated: 11 Jun 2018 7:49 PM GMT)

செய்யாறில் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாலைமறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்யாறு

செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்தவர் கரீம் (வயது 74). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், தெருவில் நடந்து செல்லும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு சைகை மூலமாக பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து கரீம் என்பவரை கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கரீம் என்பவருக்கு 74 வயது ஆவதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனால் வெளியே வந்த கரீமை வெங்கட்ராயன் பேட்டையில் பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

இதனால் அந்தப்பகுதி மக்கள் புகார் அளித்தும் கரீமை கைது செய்யாமல் போலீசார் விட்டுவிட்டதாக குற்றம்சாட்டி செய்யாறு போலீசாரை கண்டித்து செய்யாறு - ஆற்காடு சாலையில் அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினர் பெண்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீசார் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story