மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் செருதூர் வெள்ளையாற்றை தூர்வார வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்


மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் செருதூர் வெள்ளையாற்றை தூர்வார வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:30 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் அடைவதால் செருதூரில் உள்ள வெள்ளையாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் 1,200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்கள் செருதூரில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு, பின்னர் இறங்கு தளத்திற்கு வந்து மீன்களை இறக்குகின்றனர். செருதூரில் உள்ள மீன் இறங்க தளத்தில் இருந்து கடலுக்கு செல்வதற்கும், கடலில் இருந்து மீன் இறங்குதளத்திற்கும் வருவதற்கும் அங்குள்ள வெள்ளையாற்றின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த ஆறு கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.

மணல் திட்டுக்கள்

இதனால் தற்போது இந்த வெள்ளையாற்றின் கடல் முகத்துவாரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலம் வரையில் ஆற்றில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் படகு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில சமயங்களில் படகுகள் மணல் திட்டுக்களில் மோதி சேதமடைகின்றன. மேலும், தற்போது படகுகள் மீன்இறங்கு தளத்திற்கு வர முடியாமல் நடுஆற்றிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பிடித்து வரும் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ளையாற்றை தூர்வாரி படகுகள் சிரமமின்றி கடலுக்கு சென்று வர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story