பெங்களூருவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீஸ் கற்பழிப்பு


பெங்களூருவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீஸ் கற்பழிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:06 PM GMT (Updated: 11 Jun 2018 11:06 PM GMT)

பெங்களூருவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீஸ் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் 26 வயது பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த அமீன்ஷாப் (வயது 32) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக அமீன்ஷாப் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். அத்துடன் உப்பார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து அந்த பெண்ணை, அமீன்ஷாப் பல முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண் போலீஸ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதாலும், அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி அமீன்ஷாப் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும், அமீன்ஷாப்பின் குடும்பத்தினர் பெண் போலீசை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில், போலீசான அந்த பெண் அமீன்ஷாப், அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில், அமீன்ஷாப், அவரது தாய் காதுன்பீவி, சகோதரி மும்தாஜ் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுபோன்று, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக டெல்லியை சேர்ந்த மனோகர் ரோஷர் இருந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு மனோகர் ஆபாச படங்கள், குறுந்தகவல்கள் அனுப்பியதுடன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த இளம்பெண் நடந்த சம்பவங்கள் குறித்து அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இளம்பெண் புகார் கொடுத்ததும் மனோகர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story