முகநூலில் கணவருக்கு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் தகராறு தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


முகநூலில் கணவருக்கு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் தகராறு தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Jun 2018 11:09 PM GMT (Updated: 11 Jun 2018 11:09 PM GMT)

முகநூலில் கணவருக்கு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் உண்டான தகராறில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராமையா லே-அவுட் 8-வது மைல் பகுதியில் வசித்து வந்தவர் அனுப்(வயது 31). இவரது மனைவி சவுமியா (23). இந்த தம்பதிக்கு 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. அனுப், சவுமியாவின் சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் ஆகும். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அனுப் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், முகநூல் (பேஸ்புக்) மூலமாக ஒரு இளம்பெண்ணுடன் அனுப்புக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி சவுமியாவுக்கு தெரியவந்தது.

உடனே அவர் இளம்பெண்ணுடன் உள்ள பழக்கத்தை கைவிடும்படி கணவர் அனுப்பிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் அனுப்புடன் வாழ பிடிக்காமல் ஹாசனில் வசிக்கும் பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சவுமியா சென்றுவிட்டார். அதன்பிறகு, அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்புடன் சேர்ந்து வாழும்படி சவுமியாவை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு தான் பெங்களூருவுக்கு வந்து கணவர் அனுப்புடன் சவுமியா சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் உள்ள தனித்தனி அறையில் அனுப் மற்றும் சவுமியா தூக்கில் பிணமாக தொங்கினார்கள். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் உடனடியாக பாகலகுன்டே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அனுப், சவுமியாவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அனுப்புக்கு முகநூலில் இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் தொடர்பாக நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்து முதலில் சவுமியா தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இதை பார்த்த அனுப்பும் உயிரை மாய்த்து கொண்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் 2 பேரும் தற்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story