தாராவியில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி


தாராவியில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Jun 2018 11:49 PM GMT (Updated: 11 Jun 2018 11:49 PM GMT)

தாராவியில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.இதனால் அவர்கள் பெஸ்ட்அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

மும்பை,

மும்பை தாராவியில் தமிழர்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் குடிசை வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமம் மின் சப்ளை செய்து வருகிறது. இந்தநிலையில், தாராவியின் சாய்பாபா நகர், நேரு சால், கருணாநிதி சால், டோர்வாடா உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.

இரவு நேரங்களில் இந்த பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. புழுக்கம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

என்ன காரணத்திற்காக மின்வினியோகம் தடைபட்டு உள்ளது என்பதை அறிய பெஸ்ட் மின்வினியோக அலுவலகத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

பல நேரங்களில் அவர்கள் போனையும் எடுப்பது கிடையாது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில், ஆத்திரம் அடைந்த இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் இரவு தாராவி 90 அடி சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அப்போது, பெஸ்ட் அதிகாரி ஒருவர் அங்கு வந்தார். அவரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி ‘‘பொதுமக்களிடம் மின் வினியோகத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், அதை சரி செய்து விரைவில் சீரான மின் வினியோகம் வழங்கப்படும்’’ என்றும் உறுதி அளித்தார்.

ேமலும் அந்த பகுதியில் தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story