வாலாஜாபாத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்திய 9 பேர் கைது


வாலாஜாபாத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்திய 9 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2018 12:11 AM GMT (Updated: 12 Jun 2018 12:11 AM GMT)

வாலாஜாபாத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரைப்பேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வாலாஜாபாத்தில் இருந்து சென்னைக்கு ஒன்றன் பின் ஒன்றாக லாரிகளில் மணல் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்டம் கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன்(வயது 20), அரக்கோணம் அடுத்த உப்பரம்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(28), வாலாஜாபேட்டையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோகுல்(25), அரக்கோணம் அடுத்த ஆதவலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீன்(32), வாலாஜாபேட்டை சத்தியா நகரைச் சேர்ந்த முருகன்(36), சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(23), அதே பகுதியை சேர்ந்த மோகன்(25), கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பிரகாஷ்(25), சந்தோஷ் (25) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story