நெல்லையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 9:00 PM GMT (Updated: 12 Jun 2018 2:51 PM GMT)

நெல்லையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் 

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை தீர்மானித்து பணிமூப்பு அடிப்படையில் ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடைகள் மூடப்பட்டு உள்ளதால் உபரியாக இருக்கும் ஊழியர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோ‌ஷங்கள் 

ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர் சரவண பெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. டாஸ்மாக் சங்க செயலாளர் சந்திரன், டாஸ்மாக் சி.ஐ.டி.யு. தலைவர் மாரியப்பன், டாஸ்மாக் விடுதலை முன்னணி அய்யாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொ.மு.ச. மாவட்ட செயலாளர் தர்மன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், காளியப்பன், சிவன்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story