கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 6:20 PM GMT)

துரிஞ்சாபுரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கலசபாக்கம்

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 28). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கலசபாக்கத்தை அடுத்த சீராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

சண்முகம் பணிநிமித்தமாக சென்னைக்கு சென்று விட்டார். வீட்டில் பரமேஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள், சண்முகத்தின் தாயார் பூங்காவனம், தந்தை சின்னப்பா ஆகியோருடன் வசித்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் போனில் பேசியபோதும் தகராறு செய்து கொள்வார்களாம்.

இதனால் மனம் உடைந்த பரமேஸ்வரி சம்பவத்தன்று அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரியின் தாயார் வெண்ணிலா திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் “எனது மகளிடம் 5 பவுன் நகை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் தான் எனது மகள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். எனவே இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பரமேஸ்வரிக்கும், சண்முகத்திற்கும் திருமணம் முடிந்து 5 வருடங்கள் தான் ஆவதாலும், வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளதாலும் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story