கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:45 PM GMT (Updated: 12 Jun 2018 8:40 PM GMT)

திருக்கடையூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாணவ-மாணவிகள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து திருக்கடையூர் கடைவீதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார்.

கோரிக்கைகள்

அப்போது அவர்கள், அரசு அறிவித்தப்படி எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய 25 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூல் செய்வதை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story