“ஒரு குப்பை கதை” சினிமாவை திருட்டு வி.சி.டி.யில் பதிவு செய்ததாக புகார்: தியேட்டர் மேலாளர்-ஆபரேட்டர் கைது


“ஒரு குப்பை கதை” சினிமாவை திருட்டு வி.சி.டி.யில் பதிவு செய்ததாக புகார்: தியேட்டர் மேலாளர்-ஆபரேட்டர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 8:40 PM GMT)

“ஒரு குப்பை கதை” சினிமாவை திருட்டு வி.சி.டி.யில் பதிவு செய்ததாக தியேட்டர் நிர்வாகத்தின் மீது கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் மேலாளர் மற்றும் ஆபரேட்டரை கைது செய்தனர். இதனால் காலா படத்தின் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் ஒரு சினிமாவை தியேட்டர் உள்ளது.

இந்த தியேட்டரின் நிர்வாகத்தின் மீது ‘ஒரு குப்பை கதை‘ என்ற சினிமாவின் தயாரிப்பாளரான பொள்ளாச்சியை சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர், கடலூரில் உள்ள சினிமா திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறப் பட்டிருப்பதாவது:-

“ஒரு குப்பை கதை” என்ற சினிமா காளி ரெங்கசாமி இயக்கி உள்ளார். அதில் கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் என்பவர் நடித்துள்ளார். கதாநாயகியாக, ஆதலால் காதல் செய்வீர், வழக்கு எண்-18 ஆகிய சினிமா படங்களில் நடித்த மணிஷா யாதவ் நடித்துள்ளார். இந்த சினிமா, மயிலாடுதுறையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஓடி கொண்டிருந்தபோது 25.5.2018 அன்று சினிமாவை திருட்டு வி.சி.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சோதனை செய்ததில் கடந்த 25.5.2018 அன்று ஒரு குப்பை கதை சினிமா படம் மதியம் 2.10 மணி முதல் 4.10 மணி வரை விதிமுறைகளை மீறி திருட்டு வி.சி.டி.யாக பதிவு செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, தியேட்டர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்பேரில் நேற்று கடலூரில் இருந்து சினிமா திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஏட்டு பாபு ஆகியோர் கொண்ட குழுவினர் சினிமா தியேட்டருக்கு சென்று அங்குள்ள மேலாளர், ஆபரேட்டர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் ஆபரேட்டர் மயிலாடுதுறை 5-ம் நம்பர் புதுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (68), தியேட்டர் மேலாளர் திருத்துறைப்பூண்டி பூண்டுவெளி பகுதியை சேர்ந்த சுந்தர் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பாக தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் திருச்சி தில்லை நகரை சேர்ந்த சேது (64) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சினிமா தியேட்டரில் உள்ள ஒளி-ஒலி பரப்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் நேற்று மேற்கண்ட தியேட்டரில் திரையிடப்பட்ட காலா சினிமாவின் மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

Next Story