பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 8:42 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு 16 விடுதிகளும், மாணவிகளுக்கு 10 விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. பயிலும் மாணவர்களுக்கு ஒரு விடுதியும், மாணவிகளுக்கு 5 விடுதிகளும் என மொத்தம் 32 விடுதிகள் இயங்கி வருகின்றன. மேலும் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற் படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இந்த விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அரசின் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும்.

மேலும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளும், 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும், மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகளும் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டர் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. இவ்விடுதிகளில் சேர்வதற்கு தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. மேலும் ஒவ்வொரு விடுதி யிலும் முகாம் வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே தகுதி யுடைய மாணவ-மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story