காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது
x
தினத்தந்தி 12 Jun 2018 11:15 PM GMT (Updated: 12 Jun 2018 8:42 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பென்னாகரம்,

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

Next Story