தர்மபுரி, சந்தூரில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம்


தர்மபுரி, சந்தூரில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 9:29 PM GMT)

தர்மபுரி, சந்தூர் ஆகிய இடங்களில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

தர்மபுரி,

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செங்கோடன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சங்க மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, சுப்பிரமணி, சிவலிங்கம், லோகநாதன், நாகராஜ் உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி எண்ணேகொல்புதூர் கால்வாய்த்திட்டம், தூள்செட்டி ஏரி கால்வாய்த்திட்டம், நல்லம்பள்ளி கோம்பை மாரியம்மன் கோவில் அணை திட்டம் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை தொடங்க வேண்டும். தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை காலதாமதமின்றி தொடங்க வேண்டும். அனைத்து விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை பாகுபாடு இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு திட்டங்களுக்கும், தனியார் திட்டங்களுக்கும் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் முறையாக கருத்து கேட்டு உரிய ஒப்புதலை பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வட்டம் சந்தூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. நர்சரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணையா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோகுல், மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் முனிரத்தினம், ஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் சிறப்புரையாற்றினார்.

சந்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்படும் அகல மின்பாதை உயர் மின் கோபுரங்களால் நிலங்களின் மதிப்பு இழக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வெட்டப்பட்டு, விவசாயமும் அழிக்கப்படுகிறது. இதற்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். சந்தூர் வழியாக புதிய மின்பாதைகள் அமைக்க வேண்டாம். கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாய் பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் வரை கால்வாய் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இக்கால்வாயின் அகலம், ஆழம் குறைவாக உள்ளதால் தண்ணீர் கடத்தும் திறன் குறைவாக உள்ளது. இதனை அகலப்படுத்தி வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும். படேதலாவ் ஏரி கால்வாய்களில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story