திண்டுக்கல்லில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


திண்டுக்கல்லில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 9:40 PM GMT)

திண்டுக்கல்லில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நலக்குழு ஆகியவை சார்பில் திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவரித்தார்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, தொழிற்சாலைகள் ஆய்வாளர் கவிதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கணேசன் மற்றும் அலுவலர்கள், சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்தது.

அப்போது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதே முதன்மையான கடமையாக கருத வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டபடி சென்றனர். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.

Next Story