ராமேசுவரத்தில் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி 12 கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


ராமேசுவரத்தில் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி 12 கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 7:14 PM GMT)

ராமேசுவரத்தில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி 12 கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் கூறி அதனை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சம்பை, மாங்காடு, வடகாடு, குடியிருப்பு, எஸ்.கே.பட்டி, அரியான்குண்டு, ஏரகாடு உள்பட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பேச்சுவார்த்தை நடத்திய ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இன்னும் ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இறால் பண்ணைகளை அகற்றுவதாக உறுதி அளித்திருந்தாராம்.

தற்போது ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் மேலத்தெருவில் இருந்து ஏராளமானோர் காதில் பூச்சுற்றியும், சங்கு ஊதிக்கொண்டும் பேரணியாக புறப்பட்டு பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.) மாவட்ட துணை தலைவர் ஜஸ்டின், மாவட்ட செயலாளர்கள் கருணாமூர்த்தி, சிவாஜி, தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் மற்றும் கிராம தலைவர்கள், பெண்கள் திரளாக கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு, சப்–இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், அருண்பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாலை 4 மணி வரை இவர்களை அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாததால் அனைவரும் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது தாசில்தார் சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story