மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மலர்விழி கோரிக்கை மனுக்களை பெற்றார்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மலர்விழி கோரிக்கை மனுக்களை பெற்றார்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 9:31 PM GMT)

தர்மபுரியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பசுமை வீடு, இலவச வீட்டுமனை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல் மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பல்வேறு திட்டங்கள்

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் துறைசார்ந்த உதவி திட்டங்களை தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும், என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட சமூகநல அலுவலர் ரேவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story