கள்ளக்காதல் விவகாரத்தில் தறித்தொழிலாளி அடித்துக்கொலை 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கள்ளக்காதல் விவகாரத்தில் தறித்தொழிலாளி அடித்துக்கொலை 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jun 2018 11:15 PM GMT (Updated: 13 Jun 2018 9:31 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் தறித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி தனலட்சுமிக்கும், சக்திவேலுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே கள்ளக்காதலியின் மகளின் படிப்பு செலவுக்கு சக்திவேல் பணம் கட்டி உள்ளார். இதை அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவி தனது தந்தை சரவணனிடம், எனது படிப்புக்கு சக்திவேல் பணம் கட்டி உள்ளார், அவர் எப்படி கட்டலாம்? என கேட்டுள்ளார். இது சரவணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

பணம் கட்டியது உண்மை தானா? என்பதை அறிய மகளிடம் விசாரிக்க சரவணன் தனது நண்பர்கள் சேட்டு, கனகு என்கிற கந்தசாமி, மணிகண்டன் ஆகியோருடன் சக்திவேலை அழைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்தார். ஆனால் அங்கு சரவணனின் மகள் இல்லை. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ‘ஏன் குடும்பத்தை கெடுக்கிறாய்?‘ என்று கூறி, 4 பேரும் சேர்ந்து சக்திவேலை அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார். உயிருக்கு போராடிய சக்திவேலை, அவர்களே சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே அவர்கள் 4 பேரும் சேர்ந்து, சக்திவேலின் உடலை, அவரது வீட்டுக்கு எடுத்து சென்று, விஷம் குடித்து இறந்து விட்டதாக கூறி, போட்டு விட்டு சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அவரின் உறவினர்கள் இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

இதன்பேரில் சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கரநாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சக்திவேலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணன், கனகு என்கிற கந்தசாமி, சேட்டு, மணிகண்டன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story