திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை


திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 9:32 PM GMT)

வெள்ளிச்சந்தை அருகே திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை போனது. மர்மநபர்களின் துணிகர செயலால் ஓட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

வெள்ளிச்சந்தை,

குமரி மாவட்டம் பேயோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 45). இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராஜீ பேயோடு சந்திப்பு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர்களுடைய குடும்ப கோவிலான பத்ரகாளி அம்மன் கோவில் பேயோடு சந்திப்பு அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராஜீ தினமும் சென்று பூஜைகள் செய்து வருவது வழக்கம்.

திக்கணங்கோடு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரிடம் ராஜீ சீட்டு போட்டிருந்தார். கடந்த 8-ந் தேதி சீட்டு தொகை ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை வாங்கி வந்தார். பின்னர், அதில் செலவிற்காக ரூ.20 ஆயிரத்தை மட்டும் எடுத்தார். மீதம் இருந்த ரூ.5 லட்சத்தில் நிலம் வாங்க முடிவு செய்தார்.

சுற்று வட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையர்கள் பணம், நகைகளை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்ததால் ராஜீக்கு, வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று கருதினார். இதனால் குடும்ப கோவிலில் வைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார். அதைத் தொடர்ந்து கோவில் கருவறையில் ரூ.5 லட்சத்தை வைத்து விட்டு, தினமும் சென்று வழக்கம் போல் பூஜைகளை செய்து வந்தார்.

இந்தநிலையில் ராஜீ, ஒருவரிடம் நிலத்தை பேசி முடித்துவிட்டு பணம் கொடுப்பதாக கூறினார். அதற்காக நேற்று காலை கோவிலுக்கு சென்றார்.

அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

பின்னர், இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கோவிலில் இருந்து அருகில் இருந்த ஒரு கடைக்கு ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

திருடர்களுக்கு பயந்து கோவில் கருவறையில் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story