செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தாய்-மகன் பலி


செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தாய்-மகன் பலி
x
தினத்தந்தி 13 Jun 2018 11:15 PM GMT (Updated: 13 Jun 2018 10:11 PM GMT)

செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் பலியானார்கள்.

செய்யாறு,

செய்யாறு தாலுகா அருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன். விவசாயி. இவரின் மனைவி திலகம் (வயது 45), மகன் தமிழ்ச்செல்வன்(18) ஆகியோர் அருகாவூரிலிருந்து தண்டரை கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை தமிழ்ச்செல்வன் ஓட்டிச்செல்ல தாயார் திலகம் பின்னால் அமர்ந்திருந்தார்.

பெரும்பள்ளம் கிராமத்தின் ஏரிக்கரையில் வளைவில் செல்லும்போது செய்யாறில் இருந்து ஆரணி நோக்கி சென்ற கார் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியுள்ளது. இவ்விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் திலகம் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்சு மூலமாக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதனிடையே விபத்து நடந்ததும் காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தமிழ்ச்செல்வனின் தாத்தா பரமானந்தன் கொடுத்த புகாரின்பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்.


Next Story