தமிழகத்தில் அதிகரித்து வரும் நகைபறிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்


தமிழகத்தில் அதிகரித்து வரும் நகைபறிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:00 PM GMT (Updated: 14 Jun 2018 6:51 PM GMT)

தமிழகத்தில் அதிகரித்து வரும் நகைபறிப்பு குற்றங்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவை,

கோவை விமானநிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கோவையில் மழை பெய்து வருகிறது. ஆறுகள், குளங்கள் நிறைந்து வரும் நிலையில் நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நகைபறிப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு நகை பறிக்கப்படும் என்பது திருடர்களிடம் போட்டியே நடத்தப்படுகிறது. எனவே பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். தற்போது போலீசார் ரோந்து படையை அதிகரித்துள்ளனர். இதன் மூலம் நகைபறிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை ஆகும்.

ராகுல்காந்தி மத்திய அரசை எவ்வளவோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் மத்தியில் நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சியை பாரதீய ஜனதா கட்சி கொடுத்து வருகிறது. கார்த்திக் சிதம்பரம் மீதான 4,500 பக்க குற்றப்பத்திரிகையில், ப.சிதம்பரம் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கார்த்திக் சிதம்பரத்துக்கு உதவி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

இப்போது ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதில் பாரதீய ஜனதா கட்சி தலைநிமிர்ந்து நிற்கிறது. ராகுல் காந்தி நாளொரு குற்றச்சாட்டு களை கூறிக் கொண்டிருக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story