ஏரிக்கு துர்நாற்றத்துடன் மாசடைந்த நீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி


ஏரிக்கு துர்நாற்றத்துடன் மாசடைந்த நீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 14 Jun 2018 11:00 PM GMT (Updated: 14 Jun 2018 9:36 PM GMT)

மத்தூர் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு துர்நாற்றத்துடன் மாசடைந்த நீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது பெனுகொண்டாபுரம் பெரிய ஏரி. சுமார் 240 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பாரூர் பெரிய ஏரியில் இருந்து கால்வாய் மூலமாக நீர்வரத்தை பெறுகிறது. கடந்த ஒரு வாரமாக பாரூர் பெரிய ஏரியின் உபரிநீரானது கால்வாய் மூலமாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு வந்தவாறு உள்ளது. ஆனால் முன்பு எப்போதும் போல இல்லாமல் தற்போது கால்வாயில் வரக்கூடிய தண்ணீர் மாசடைந்து பச்சை நிறத்தில், துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் பொதுமக்கள் கால்வாயில் குளிக்கவோ, துணி துவைப்பதற்கோ தயங்குகிறார்கள்.

இந்த கால்வாய் சமத்துவபுரம் அருகில் வரும் போது அங்குள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி சிறிய குளம் போல காணப்படுகிறது. அந்த தடுப்பணையில் சிறுவர்கள் அவ்வப்போது உற்சாகமாக குளியல் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதால் சிறுவர்கள் குளிக்க அச்சப்படுகிறார்கள்.

கால்வாயில் வரும் பச்சைநிற தண்ணீர் பெனுகொண்டாபுரம் ஏரியை சேரும் இடத்திலும் அவ்வாறே சென்றடைகிறது. பெனுகொண்டாபுரம் ஏரியின் பிரதான மதகு உள்ள பகுதியில் நீர் வெளிர் நிறத்திலும், மறுமுனையில் அடர்பச்சை நிறத்திலும் உள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரியில் மீன்பிடி தொழில் சிறப்பாக நடைபெறும் இந்த வேளையில் மாசடைந்த நீரால் மீன்களின் வளர்ச்சியும், பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. மேலும் ஏராளமான மீன்கள் செத்து மடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகாரிகள் இந்த ஏரியை பார்வையிட்டு எதனால் நீர் இவ்வாறு மாசடைந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து அச்சத்தை போக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story