ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை கள்ளக்காதலி மகன் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு


ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை கள்ளக்காதலி மகன் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jun 2018 11:15 PM GMT (Updated: 14 Jun 2018 9:36 PM GMT)

சேலத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலியின் மகன் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவர் தி.மு.க. பிரமுகராகவும் இருந்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கோபாலுக்கும், சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த கணவரை இழந்த ஜோதி (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் ஜோதிக்கு ஏற்கனவே உலகநாதன் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் ஜோதியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற கோபால், பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உலகநாதனுக்கும், ஜோதிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஜோதிகாவுக்கு, தனது மாமியாரின் கள்ளக்காதல் பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது கணவரிடம், கோபால் இங்கு வரக்கூடாது என்றும், அவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் வற்புறுத்தி வந்தார்.

இதையடுத்து உலகநாதன், கோபாலிடம் எங்களது வீட்டுக்கு வரக்கூடாது என கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த உலகநாதன், கோபாலை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை ஜோதி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். ஜோதிகாவும் வெளியே சென்றார். கோபால் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். மதிய நேரத்தில் உலகநாதன் தனது நண்பர்கள் 6 பேருடன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் கோபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் உலகநாதன் உள்பட 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கோபாலின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். கொலை நடந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகநாதன் மற்றும் அவருடைய நண்பர்கள் 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற் படுத்தி உள்ளது. 

Next Story