அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது


அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 9:37 PM GMT)

அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

அந்தியூர்,

ஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் வனப்பகுதியில் முதல் முறையாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்வநாதன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் ஆகிய வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 15-ந்தேதி (இன்று) தொடங்கி 17-ந்தேதி வரை என 3 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடக்க உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

தற்போது வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் போது குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்கு செல்லவேண்டும். தங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்’ என்றார்.

மேலும், புலிகள் கணக்கெடுக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்புகள், புலிகள் நடமாடும் இடங்கள், கால்தடங்களை பதிவு செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் பதிவு செய்தல் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், வனச்சரகர்கள் பாலகிருஷ்ணன் (அந்தியூர்), மணிகண்டன் (பர்கூர்), செங்கோட்டையன் (சென்னம்பட்டி) மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story