அழகாக இல்லாததால், மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்


அழகாக இல்லாததால், மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:15 PM GMT (Updated: 14 Jun 2018 9:40 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே அழகாக இல்லாததால் திருமணம் ஆன 20-வது நாளில் மனைவியை நண்பர் களுக்கு விருந்தாக்கிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆபத்்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அந்த வாலிபர் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் நீ அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறாய் என்று கூறி அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மூன்றாவது அழைப்பு என்று சொல்லக் கூடிய கறி விருந்து அந்த வாலிபரின் மாமியார் வீட்டில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விருந்தை முடித்து விட்டு மனைவியை இருசக்கர வாகனத்தில் அந்த வாலிபர் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் குடிபோதையில் மனைவியின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் அந்த வாலிபர், கடித்து காயப்படுத்தி உள்ளார். அப்படியும் ஆத்திரம் தணியாத அவர், இரவு நேரம் என்றுகூட பாராமல் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தனது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர், காட்டுபகுதியில் குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி உள்ளார். இதனையடுத்து அவரது அழைப்பை ஏற்று அவரது நண்பர்கள் இருவர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கு வந்தவுடன், தனது கண் முன்னாலேயே தனது மனைவியை நண்பர்களுக்கு அவர் விருந்தாக்கியுள்ளார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கம்பு மற்றும் கட்டையால் அந்த வாலிபர் தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அந்த வாலிபரின் நண்பர்கள் இருவரும் அந்த பெண்ணிடம் மாறி, மாறி உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் அந்த வாலிபர் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று விட்டார்.

வீட்டுக்கு வந்தவுடன் அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது மாமியாரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் மாமியார், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லதே, நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி விசயத்தை வெளியில் தெரியாமல் அமுக்கியுள்ளார். தனது உடல் நிலை மோசமானதால் அந்த பெண், தனது அண்ணனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள், அந்த பெண் கிடந்த கோலத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தலைஞாயிறு போலீசார் அந்த வாலிபரையும், அவரது நண்பர்களில் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

அழகாக இல்லாததால் மனைவியை நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story