சிறையில் உள்ள விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி மாநில அரசு உத்தரவு


சிறையில் உள்ள விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 18 Jun 2018 12:42 AM GMT (Updated: 18 Jun 2018 12:42 AM GMT)

மராட்டியத்தில் பருவ மழை பொய்த்துபோதல், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மும்பை,

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்காக ரூ.15 ஆயிரத்து 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன்கள் இதுவரையில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளும் பயிர்க்கடன் தள்ளுபடியால் பயனடையும் பொருட்டு அவர்களையும் இந்த திட்டத்தில் இணைப்பதற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி நாக்பூர் மற்றும் நாசிக் மத்திய சிறைச்சாலை ஆகியவற்றில் அடைக்கப்பட்டு இருக்கும் 88 விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை புறநகர் கலெக்டர் சச்சின் குருவே தெரிவித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடியில் ஒரு விவசாயி கூட விடுபட கூடாது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். 

Next Story