போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு


போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Jun 2018 2:58 AM GMT (Updated: 19 Jun 2018 2:58 AM GMT)

போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்த நவநிர் மாண் சேனா எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

புனே,

புனே ஜூன்னார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நவநிர்மாண் சேனாவின் சரத் சோனவானே. சம்பவத்தன்று இவரது ஆதரவாளர் ஒருவரது லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் கோதுமை கொண்டு செல்லப்படுவதாக அங்குள்ள ஆலேபாட்டோ போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

இதுபற்றி அறிந்த சரத் சோனவானே எம்.எல்.ஏ. சப்-இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு பேசி, அந்த லாரியை விடும்படியும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படியும் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் லாரியை விடுவிக்கவில்லை. அவரை சந்தித்தும் பேசவில்ைல. இதனால் ஆத்திரம் அடைந்த சரத் சோனவானே எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரத் சோனவானே எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story