ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மு.க. ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மு.க. ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை
x
தினத்தந்தி 22 Jun 2018 10:45 PM GMT (Updated: 22 Jun 2018 8:23 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மாலை அணிவித்து யானை ஆசீர்வாதம் வழங்கியது.

ஸ்ரீரங்கம்,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

இதனை தொடர்ந்து ஒரு ஓட்டலில் தங்கி இருந்த மு.க.ஸ்டாலின் நேற்று காலை கட்சி பிரமுகர்களின் திருமண விழா மற்றும் காதணி நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைப்பதற்காக ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டார். திருமண மண்டபத்திற்கு செல்வதற்கு முன் ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்த கார்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரெங்கா, ரெங்கா கோபுரம் முன்பாக நிறுத்தப்பட்டன. அப்போது அங்கு ஏற்கனவே பூஜை நடத்திய மாலை மற்றும் பொருட்களுடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் தலைமை பட்டர்களில் ஒருவரான சுந்தர் நின்று கொண்டிருந்தார். மேள தாளமும் முழங்கப்பட்டது.

ஸ்டாலின் காரில் இருந்து இறங்கியதும் அவருக்கு பட்டு சால்வையை சுந்தர் பட்டர் அணிவித்து வரவேற்று நெற்றியில் பொட்டு வைத்தார். இதனை தொடர்ந்து தாம்பாள தட்டில் இருந்த மாலையை எடுத்து யானையிடம் கொடுத்தனர். யானை அந்த மாலையை ஸ்டாலினுக்கு அணிவித்து ஆசீர்வாதம் வழங்கியது. இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அந்த யானைக்கு கரும்பு துண்டுகள் மற்றும் வெல்ல கட்டிகள் ஆகியவற்றை வழங்கினார்.

அதன் பின்னர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம் அருகில் வந்தார். அங்கு ஸ்டாலினுக்கு பிராமணர் சங்கம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, “அடுத்த முறை நீங்கள் இங்கு தமிழக முதல்வராக வரவேண்டும்” என கூறினார்கள். மேலும் ஸ்ரீரங்கம் கோவில் பகுதியில் உள்ள அடிமனை பிரச்சினைக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்கவும், விற்கவும் முடியவில்லை. பத்திரப்பதிவும் செய்ய முடிவதில்லை. இதனை முறைப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே இதுபற்றி சட்டமன்றத்தில் நீங்கள் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு ஆவன செய்வதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்த ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அடையவளஞ்சான் வீதியில் உள்ள கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவை நடத்தி வைப்பதற்காக சென்றார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், பிற மாநில முதல் மந்திரிகள், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களுக்கு கோவில் சார்பில் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் வைத்து தான் மரியாதை செய்து உள்ளே அழைத்து செல்லப்படுவது வழக்கமாகும். மறைந்த ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும், 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் -அமைச்சரான பின்னரும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த போது இதே இடத்தில் வைத்து தான் மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story