கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 23 Jun 2018 10:45 PM GMT (Updated: 23 Jun 2018 8:17 PM GMT)

தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் மீனவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், பிள்ளையார்திடல், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 4,000 நாட்டுப்படகுகள் மூலமும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 301 விசைப்படகுகள் மூலமும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இதில் விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும் மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

வருவாய் இழப்பு

தற்போது கடற்பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கவில்லை. தஞ்சை மாவட்ட கடற்பகுதியிலும் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் வழக்கம்போல கடலுக்கு செல்ல வேண்டிய தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Next Story