மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சென்னை புறநகரில் தி.மு.க.வினர் சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சென்னை புறநகரில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Jun 2018 9:25 PM GMT (Updated: 23 Jun 2018 9:25 PM GMT)

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரையும் போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம், 

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாம்பரத்தில், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரையும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரையும், பம்மல் பகுதியில் முன்னாள் நகரமன்ற தலைவர் வே.கருணாநிதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல அனகாபுத்தூர், செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி தலைமையில் ஆதிகுருசாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று தலைமை பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், முருகேசன் ஆகியோர் தலைமையில் தேரடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மணலி மார்க்கெட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஏ.வி.ஆறுமுகம், அவை தலைவர் துரை உள்பட 50 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story