ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரம்!


ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரம்!
x
தினத்தந்தி 24 Jun 2018 11:54 AM GMT (Updated: 24 Jun 2018 11:54 AM GMT)

தலைப்பைப் பார்த்துவிட்டு, எதிர்காலத்தில் குடிநீர் விலை இவ்வளவு ஆகப் போகிறது என்று சொல்கிறீர்களாக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு.

தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும், பெரும் பணக்காரர்கள் பலரும் பருகிக் கொண்டிருக்கும் குடிநீரின் விலைதான் இது.

எல்லாப் பொருட்களிலும் சாதாரண வகை, ஆடம்பர வகை என்று உண்டு. அனேகமாக தண்ணீரில்தான் அது இல்லாமல் இருந்தது.தற்போது, மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான தண்ணீரிலும் ‘ஆடம்பர’ வகை வந்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு ‘டைனோசர் விலை’ சொல்ல வேண்டுமா என்பவர்களுக்கு, ஆர்ட்டிக் பனிப்பாறைகளை உருக்கியும், இமயமலை நீரூற்றுகளில் சேகரித்தும், ஆழ்கடல் தண்ணீரை உப்பு நீக்கியும் நாங்கள் இந்த குடிநீரை உங்களுக்குத் தருகிறோம் என்று இதன் தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

‘தூய்மையானது’, ‘பரிசுத்தமானது’, ‘மனிதர் கரங்கள் படாதது’ என்று விளம்பரப்படுத்தும் இந்தக் குடிநீர், விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பாட்டில்களில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

சாதாரண மக்கள் இவற்றை எதேச்சையாக எடுத்துப் பார்த்தால்கூட அதிர்ச்சியடைந்து விடுவார்கள். ஒரு லிட்டர் ஆடம்பர குடிநீரின் விலை ரூ. ஆயிரம் முதல் 3,381 வரை!

இந்த விலைக்கு ‘நியாயம்’ சேர்ப்பதற் காகவே, இது உங்களின் வாழ்க்கைத் தரத்தை, அந்தஸ்தை உயர்த்தும், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்தது, தீங்கு தரும் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் இல்லாதது என்று இதன் தயாரிப்பாளர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள்.

என்னதான் சொல்லட்டும், பன்னீரில் கொப்பளிக்கும் பணக்காரர்கள் உலகெங்கும் இருக்கட்டும், இவ்வளவு விலை கொடுத்து யாராவது குடிநீர் வாங்கிப் பருகுவார்களா என்று நீங்கள் நினைத்தால்... மறுபடி தவறு!

இன்றைய தேதிக்கு, உலகெங்கும் ஆடம்பர குடிநீரின் சந்தை மதிப்பு 147 பில்லியன் டாலர்கள். ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. ரூபாயில் எவ்வளவு வரும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சந்தை 9 சதவீத அளவுக்கு வளர்ந்து வருகிறது.

உலகில் எது அறிமுகமானாலும் அதை அனுபவித்துப் பார்த்துவிடத் துடிக்கும் நவீன இந்தியர்கள், இந்த ஆடம்பரக் குடிநீரை மட்டும் பருகாமல் இருப்பார்களா?

அவர்களுக்காகவே பல இந்தியக் குடிநீர் நிறுவனங்களும் வெளிநாட்டுக் குடிநீர் நிறுவனங்களும் ஆடம்பரக் குடிநீர் பாட்டில்களை சந்தைக்குக் கொண்டு வந்து அடுக்கியிருக்கின்றன.

இமயமலையில் இருந்தும் சக்யாத்ரி மலையில் இருந்தும், பூச்சிக்கொல்லிகள், வேதிப்பொருட்களின் தடயமே இல்லாத தண்ணீரைத் தருவித்துத் தருகிறோம் என்கிறார்கள்.

இந்தியாவில் கடை விரிக்கத் தொடங்கியிருக்கும் பின்லாந்து ஆடம்பரக் குடிநீர் நிறுவனமான ‘வீன்’-ன் இந்திய விற்பனை இயக்குநர் கணேஷ் ஐயர், ‘‘இன்று வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திலும் ஆடம்பரம் நுழைவதைப் பார்க்கிறோம். அதில் தண்ணீர் விஷயத்தில் எங்கள் ‘பிராண்ட்’ மிகவும் பொருத்தமாக இருக்கும். சிலருக்கு இது புதிதாகத் தெரிந்தாலும், உலகம் எங்கும் சுற்றி வருபவர் களுக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் கண்ணாடி பாட்டில்களில் பரிமாறப்படும் இந்த ஆடம்பரக் குடிநீர் பற்றித் தெரியும். இந்தியாவிலும் எங்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். காரணம், இங்கு மக்களின் வருவாய் அதிகரித்து வருகிறது, இரட்டை வருமானம் கொண்ட, அதேநேரம் குழந்தைகளற்ற தம்பதிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. சிறிதும் நஞ்சற்ற பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று எண்ணுவோரும் அதிகரித்திருக்கிறார்கள்’’ என்கிறார்.

ஆடம்பர குடிநீரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கும் மற்றொரு நிறுவனம், வைகிங் வெஞ்சர்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவரான சச்சின் ஜோஷி, கவனமாக செறிவூட்டப்பட்ட இயற்கை தாதுப்பொருட்கள் தங்கள் குடிநீரில் இருப்பதாகக் கூறுகிறார்.

‘‘இதன் காரணமாக எங்கள் குடிநீர் தனிச்சிறப்பான சுவையுடன் இருப்பதுடன், இமயமலையின் தூய்மையான சாரம் இருப்பதால் நம் ஊக்கத்தையும் உயர்த்துகிறது’’ என்று சச்சின் ஜோஷி சொல்கிறார்.

தங்கள் குடிநீர் சாதாரணமானது அல்ல என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஆடம்பர குடிநீர் நிறுவனங்கள் விசேஷ காரணங் களைச் சொல்கின்றன என்கிறார்கள், சந்தை வல்லுநர்கள். அதாவது, இயற்கை நீரூற்று, பனிக்கட்டி ஆகியவற்றில் இருந்து தயாரித்து அங்கேயே பாட்டிலில் அடைக்கப்பட்டது என்பது போன்ற விளம்பரங்கள்.

இவையெல்லாம், சாதாரணமான மினரல் வாட்டரில் இருந்து தங்கள் குடிநீர் வித்தியாசமானது என்று வேறுபடுத்திக் காட்டவும், ஒரு தனிச்சிறப்பைக் கூட்டவும், மக்களிடம் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தவும் கூறும் காரணங்கள். ஆடம்பர மோகம் கொண்டவர்கள் இந்தக் குடிநீரை வாங்கிப் பருகுவார்கள் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தயாரிப்பு மூலத்தில் இருந்து மட்டுமல்ல, சேர்க்கப்படும் பொருட்களாலும் தங்கள் குடிநீரை ஆடம்பரத் தயாரிப்பாளர்கள் வேறு படுத்திக்காட்டுகிறார்கள். தங்கள் குடிநீரில், துளசி, குங்குமப் பூ, இஞ்சி, நெல்லிச்சாறு போன்றவை சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

‘‘குடிநீர் பிரிவில் உற்சாகமூட்டும் (?) மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. பல்வேறு நிறுவனங்களும் தனித்தன்மை வாய்ந்த குடிநீரைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. அதன் சிறப்பைக் காட்டும் விதத்தில் பாட்டில்களில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றன’’ என்று சந்தை ஆலோசகர் ஹரீஷ் பிஜூர் கூறுகிறார்.

முதல்கட்டமாக, ஆடம்பரக் குடிநீர் நிறுவனங்கள் உயர்தர ஓட்டல்கள், ‘டாப்’ கேட்டரிங் நிறுவனங்களைக் குறி வைத்திருக்கின்றன.

‘‘நாட்டில் நட்சத்திர ஓட்டல்கள், உணவகங்கள் பெருகப் பெருக, எங்கள் பிராண்டின் வளர்ச்சியும் அதற்கேற்ப இருக்கும் என்று கருதுகிறோம். குடிநீர் மட்டுமின்றி, எதிர்காலத்தில் தண்ணீர் சார்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலும் பல பொருட்களையும் நாங்கள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று ‘வீன்’ ஆடம்பர குடிநீர் பிராண்டின் கணேஷ் சொல்கிறார்.

வைகிங் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சச்சின் ஜோஷியோ, ‘‘உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது எங்கள் ஆடம்பரக் குடிநீர் விற்பனைக்கு மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது. ஆண்டுதோறும் நாங்கள் இரட்டை இலக்க வீதத்தில் வளர்ந்து வருகிறோம்’’ என்கிறார்.

குடிநீர் லாரிக்குப் பின்னால் மக்கள் ஓடும் இத்தேசத்தில், ஆடம்பரக் குடிநீர் குடிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். 

Next Story