இலங்கைக்கு காரங்காட்டில் இருந்து மண்பானைகள் ஏற்றுமதி பாரம்பரிய மரபுநடை பயணத்தில் தகவல்


இலங்கைக்கு காரங்காட்டில் இருந்து மண்பானைகள் ஏற்றுமதி பாரம்பரிய மரபுநடை பயணத்தில் தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2018 10:45 PM GMT (Updated: 25 Jun 2018 7:03 PM GMT)

இலங்கைக்கு காரங்காட்டில் இருந்து மண்பானைகள் ஏற்றுமதியானது பாரம்பரிய மரபுநடை பயணம் நிகழ்ச்சியில் தெரியவந்துள்ளது.

தொண்டி

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், பாரம்பரியம்மிக்க இடங்களை நேரில் கண்டு அவற்றின் சிறப்புகளை அறிந்துகொள்ள பாரம்பரிய மரபுநடை பயணத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் உள்ள நெய்தல் நிலத்தின் முற்காலச்சூழலை தெரிந்துகொள்ள இயற்கை பாரம்பரிய மரபுநடை பயணம் அங்குள்ள சூழலியல் பூங்காவில் நடைபெற்றது.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அனைவரையும் நிறுவனத்தின் செயலாளர் ஞானகாளிமுத்து வரவேற்றார்.

இதில் கலந்து கொண்ட ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு பேசியதாவது:– 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடற்கரை சோலைகள், துறைமுகங்களின் சூழலை சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. பழமை மாறாமல் ஒரு கடற்கரை சோலையும், துறைமுகமும் இருந்திருந்தால் அது எப்படி இருக்குமோ அத்தகைய சூழல் தற்போதும் காரங்காடு கிராமத்தில் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கிலோ மீட்டர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பகுதிகளில் ஓடைகள், காட்டாறுகள் அதிகமாக உள்ளன. இவை கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கை துறைமுகங்கள் உருவாகியுள்ளன. பழங்காலத்தில் கரையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களில் இருந்து படகுகளில் சரக்குகளை ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன.

13, 14–ம் நூற்றாண்டுகளில் முத்தூற்றுக்கூற்றம் எனும் நாட்டுப்பிரிவில் தொண்டி, நானாதேசிப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், பாசிப்பட்டினம், நீர்ப்பட்டினம் ஆகிய துறைமுக பட்டினங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

தீர்த்தாண்டதானத்தில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுகள் இந்த ஊரை திட்டானம் என்றும் இங்கு வணிகக்குழுக்கள் தங்கி இருந்ததையும் குறிப்பிடுகிறது. திட்டானம் என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் வட்டானம் என்னும் ஊர் உள்ளது. வட்டானம் என்பது வட்டவடிவமான மரக்கலத்தை குறிக்கிறது. இங்கு வட்டவடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம். தளிமருங்கூர் 9–ம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்தது.

காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழிப்பகுதியில் அதிகஅளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. இங்கிருந்து இலங்கைக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்பானைகள் ஏற்றுமதியானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் இங்குள்ள இயற்கையான உப்பங்கழி ஒரு சிறந்த இயற்கை துறைமுகமாக காட்சிஅளிக்கிறது. எனவே கல்வெட்டுகள் சொல்லும் நீர்ப்பட்டினம் எனும் துறைமுகம் காரங்காடாக இருக்கலாம்.

காரங்காடு கடற்கரை களிமண்பாங்கானது. இங்கு கோட்டைக்கரை ஆறு மூன்றாக பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் இயற்கையான சதுப்பு நிலக்காடுகள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளன. உப்பங்கழியின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள இக்காடுகள் கண்ணுக்கு விருந்தாகிறது. ஆழம் குறைவான இப்பகுதி அரியவகை பறவைகள், கடல் விலங்குகள், தாவரங்களின் இருப்பிடமாக விளங்குகிறது.

இங்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும்இவை சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், ராமநாதபுரம் நிவாஸ்சங்கர், ஆசிரியர் பேரையூர் முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story