கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டம்: புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை


கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டம்: புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2018 11:59 PM GMT (Updated: 26 Jun 2018 11:59 PM GMT)

கணவன் கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்ததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 57). இவர் அதே கிராமத்தில் அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வேல்விழி (45). இவர்கள் மகள் அர்ச்சனாதேவி (21). இவருக்கும் வேலூர் மாவட்டம், நெமிலி தாலுகா புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (29) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

தங்கராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு தங்கராஜிக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தங்கராஜ் ஒரு மாதத்திற்கு முன் தனது கள்ளக்காதலியுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அர்ச்சனாதேவி ரங்காபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கணவன் தனக்கு செய்த துரோகத்தை எண்ணி அவர் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனாதேவி குளியலறையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

வலி பொறுக்க முடியாமல் அவர் அலறியதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அர்ச்சனாதேவியின் தந்தை சம்பத் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். திருத்தணி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story