கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2018 11:00 PM GMT (Updated: 28 Jun 2018 9:39 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள மாதிநாயனப்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அசோக் (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் மாதேவி (19). வெங்கடேஷ் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அதே போல மாதேவி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஒரே கிராமத்தில் வசித்து வந்த அசோக்கும், மாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலானது. அவர்கள் 2 பேரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது அவர்களது பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் அசோக்கும், மாதேவியும் தங்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுப்பார்கள் என எண்ணி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு மாதிநாயனப்பள்ளியில் தங்கள் வீட்டு முன்பு அசோக்கும், மாதேவியும் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். அவர்கள் 2 பேரையும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு காதல் ஜோடி 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அசோக்கும், மாதேவியும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்து 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Next Story