காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் தண்ணீர் திறப்பு


காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Jun 2018 12:12 AM GMT (Updated: 29 Jun 2018 12:12 AM GMT)

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 28,880 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது.

மைசூரு,

தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கும், கபினி அணைக்கும் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,284 அடி (கடல் மட்டத்தில் இருந்து) கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,282.35 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு 10,591 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அதுபோல் அணையில் இருந்து 6,167 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. நேரம் செல்ல செல்ல அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கபினி அணையின் நீர்மட்டம் 2,283 அடியை எட்டியது. அந்த சமயத்தில் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் இருந்தது.

அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் கபிலா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி காவிரி ஆற்றில் கலந்தது. பின்னர் அந்த நீர் தமிழ்நாடு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. கபினி அணையில் திறந்துவிடப்பட்டுள்ள நீரால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கபிலா ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதுபோல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் (மொத்த கொள்ளளவு-124.80 அடி) நீர்மட்டம் 105.63 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 3,995 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 3,099 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மாலையில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 106 அடியை எட்டியது.

அந்த சமயத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,995 கனஅடி வீதமாகவும், நீர்வெளியேற்றம் வினாடிக்கு 3,880 கனஅடி வீதமாகவும் இருந்தது. கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேர்த்து மொத்தம் 28,880 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு சென்று கொண்டு இருப்பதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. 

Next Story