‘மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’


‘மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’
x
தினத்தந்தி 4 July 2018 12:30 AM GMT (Updated: 3 July 2018 10:35 PM GMT)

மானாமதுரை பகுதியில் அமைக்கப்படும் மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

மானாமதுரை,

மானாமதுரை பகுதி வைகை ஆற்றுப்படுகையில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து, பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பகுதி வைகை ஆற்றில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 72 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் திருப்புவனம், மானாமதுரை ஆகிய 2 தாலுகாக்களிலும் வைகை ஆற்றை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அரசு மணல் குவாரி அமைத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் நேற்று மானாமதுரை பழைய பஸ் நிலையம் எதிரே தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது, மணல் குவாரி அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்யாவிடில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் உமாதேவன், குருமுருகானந்தம், விஜயகுமார், சுரேஷ்பாபு, நகர வர்த்தகர் சங்க தலைவர் பாலகுருசாமி, தி.மு.க. சார்பில் அண்ணாத்துரை, ராஜாமணி, பொன்னுச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கமணி, குணசேகரன், ம.தி.மு.க. சார்பில் கண்ணன், மருது, தே.மு.தி.க. தர்மாராமு, த.மா.கா. முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. சார்பில் கண்ணன், சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணலை விற்று மக்களை அழித்து ஆட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. மக்களை அழிப்பதற்கு என்றே தமிழக அரசு செயல்படுவதை ஏற்க மாட்டோம். மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.

Next Story