தினம் ஒரு தகவல் : மனித வாழ்வில் தொடர்பு உடைய நவரத்தின கற்கள்


தினம் ஒரு தகவல் : மனித வாழ்வில் தொடர்பு உடைய நவரத்தின கற்கள்
x
தினத்தந்தி 5 July 2018 5:02 AM GMT (Updated: 5 July 2018 5:02 AM GMT)

நவ ரத்தினங்கள் எந்த காலத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது என்பதை யாரும் சொல்ல முடியவில்லையாம்.

 ‘நவரத்தினா‘ என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தி, கன்னடா, பர்மா, இந்தோனேசியா, நேபாளி ஆகிய மொழிகளில் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. தமிழிலும், மலையாளத்திலும் நவரத்தினம் என்றும், தெலுங்கில் நவரத்னலு என்றும் அழைக்கப்படுகிறது. அதுதான் நமக்கு தெரியுமே தமிழின் இறுதியில் ஒரு ‘லு‘ சேர்த்தால் அது தெலுங்கு. பல நாடுகளில் மன்னர்களும், ராஜ குடும்பத்தினரும் நவரத்தினங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இதில் இந்தியா, நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மத, கலாசார வித்தியாசங்களை மீறி பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தாய்லாந்து நாட்டில் நவரத்தினம் என்பது தேசியச் சின்னமாக மட்டுமின்றி மன்னரின் ராஜ சின்னமாகவும் விளங்குகிறது. அங்கு மன்னர் மக்களுக்கு அளிக்கும் உயர்ந்த விருதின் பெயர் நொவரட் ரச்சாவரபோன். அந்தப் பதக்கத்தில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

இந்து மதம் அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையிலும் இவை தொடர்பு கொண்டிருக்கின்றன. எனவே இந்த ஒன்பது ரத்தினங்களை அணிவதன் மூலம் கிரகங்களின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இவைகளை அணியும் போது குறை இல்லாத நல்ல தரமான கற்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒன்பது கற்களுக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. மாணிக்கம் சூரியனை குறிப்பதால் அது நடுவில் இருக்க வேண்டும். அதனைச் சுற்றிலும் கடிகார சுற்றுவாக்கில் வைரம், முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மற்றும் மரகதம் என்று அமைய வேண்டும். நவக்கிரக எந்திரத்திலும் இதே அமைப்புதான் இருக்கிறது.

தாய்லாந்து அரசிகள் பரம்பரையாக இந்த அமைப்புள்ள செயின்களை அணிகிறார்களாம். இப்படி பல நம்பிக்கைகளை கொண்டதாக நவரத்தின கற்கள் இருக்கிறது. 

Next Story