தினம் ஒரு தகவல் : சூரியன், உலகின் பிறப்பிடம்


தினம் ஒரு தகவல் : சூரியன், உலகின் பிறப்பிடம்
x
தினத்தந்தி 6 July 2018 5:02 AM GMT (Updated: 6 July 2018 5:02 AM GMT)

உலகத்தின் பிறப்பிடம் சூரியன். எனவேதான் சூரியனுக்கு அண்டயோனி என்ற பெயரும் உண்டு.

சூரியனிடம் இருந்து உலகம் தோன்றிய கோட்பாடுகள் பலவாக உள்ளன. நாம் காணும் சூரியன் உண்மையில் ஒரு விண்மீனே.

சூரியன் வேறு எதையும் சுற்றாமல் தானே வேகமாக சுழன்று கொண்டு தன்னுடைய சூரிய மண்டலத்துடன் நொடிக்கு 12.5 மைல் வேகத்தில் லைரா என்ற விண்மீன் மண்டலத்தை நோக்கி விரைகிறது. சூரியன் சுழலும்போது 80 ஆயிரம் மைல் உயரத்திற்கு அதன் தீ நாக்குகள் எழுகின்றன. இவ்வாறு எழுகின்ற தீ நாக்குகள் தாமாக வீசி எறியப்பட்டு புவியும் கோள்களும் உண்டாயின என்பது ஒரு கோட்பாடு. நம் சூரியன் மீது வால் நட்சத்திரமோ அல்லது வேறு சூரியனோ மோதியதால் சிதறிய பகுதிகளே கோள்களாக உருவெடுத்ததாக இன்னொரு கோட்பாடு கூறுகிறது.

ஆனால் அண்மைக்கால கோட்பாடு, சூரியனை சுற்றி வந்த நெபுலா என்ற வாயு மண்டலம், தூசி முதலியவை உறைந்து திரண்டு பூமியும் கிரகங்களும் உருவாகியிருக்ககூடும் என்கிறது. பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் மீது காணப்படும் பழம்பாறைகளின் மீது நடத்திய தொன்மையான ஆராய்ச்சி இதனை நிரூபிக்கிறது.

சூரியனிடம் இருந்து வெளித்தள்ளப்பட்ட கிரகங்களும் சூடான வாயுக்களாகவே நீண்ட நெடுங்காலம் இருந்து வந்தன. இன்றும் கூட நம் உலகத்தின் மையப்பகுதி வெப்பம் மிகுந்த இறுகிய பாறைக்குழம்புகளாகவே உள்ளது. நாளடைவில் சூரியனில் இருந்து 14 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் விலகிசென்றதால் குளிர்ச்சியடைந்த வாயுக்கள் திரவமாக மாறின. மழைப்பொழிவால் பூமியின் மேற்பகுதி வெப்பம் தணிந்து கூம்பு வடிவ மலைகள் உண்டாயின. மழையாலும் காற்றாலும் மலைகள் அரிக்கப்பட்டு மண்தோன்றியது. இவ்வாறு படிப்படியாக உலகத்தின் தோற்றம் மலை, நிலம், மண், கடல் என்று மாறியது. உலகில் உயிரின தோற்றத்திற்கு உகந்த தட்பமும், வெப்பமும் நிலவியது.

உலகின் முதல் உயிரினங்கள் நீரிலேயே பிறந்தன. முதலில் நீர்த்தாவரங்கள் தோன்றின. அதன்பின் நகரும் ஓரணு உயிர், ஈரணு உயிர், அதன்பின் பல அணு உயிர்கள் தோன்றின. அடுத்து நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய பல்லி, மீன், தவளை போன்ற நில நீர் உயிரினங்கள் தோன்றின. அதன்பிறகு உயிரினங்களின் பரிணாமவளர்ச்சி ஏற்பட்டது. அதன்படி முதுகு எலும்பு உள்ள உயிரினங்கள், பாலூட்டிகள் தோன்றின. இந்த உயிரினங்களும் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து குரங்கினத்தில் இருந்து மனித இனம் தோன்றியது. மனிதன்தான் பரிணாமத்தின் கடைசி நிலை என்று எளிதில் கூறிவிட முடியாது. மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்து சூப்பர் மனித இனம் தோன்றும் வாய்ப்பும் இருக்கிறது. 

Next Story