திருமானூர் அருகே வரத்து வாய்க்காலை பொதுமக்களே தூர்வாரினர்


திருமானூர் அருகே வரத்து வாய்க்காலை பொதுமக்களே தூர்வாரினர்
x
தினத்தந்தி 6 July 2018 10:30 PM GMT (Updated: 6 July 2018 7:10 PM GMT)

திருமானூர் அருகே வரத்து வாய்க்காலை பொதுமக்களே தூர்வாரினர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கோக்குடி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சில்லக்குடி பகுதியில் இருந்து மழை பெய்யும் போது வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். வரத்து வாய்க்கால் மூலம் 90 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வரத்து வாய்க்கால் பல இடங்களில் தூர்ந்து போகியும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்தன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஏரிக்கு முழுமையாக வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த ஏரி, வரத்து வாய்க்காலை நம்பி பாசனம் செய்து வரும் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

எனவே, ஏரியை தூர்வாரவும், வரத்து வாய்க்காலை தூர்வாரவும் மாவட்ட கலெக்டரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

ஆனால் இவைகளை தூர்வாராமல் மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தது. இந் நிலையில் ஊர் பொதுமக்கள் நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் வீட்டுக்கு வீடு வரி வசூலித்து தங்களது சொந்த பணத்தில் சுமார் ரூ.10 லட்சம் செலவில் வரத்து வாய்க்காலை தூர்வாரும் பணியில் பொதுமக்களே பொக்லைன் எந்திரம் மூலம் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பெரிய ஏரியை தூர்வாரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதே போல திருமானூர் ஒன்றியத்தில் பல ஏரிகள் தூர்ந்தும், வரத்து வாய்க்கால்கள் தூர்ந்தும் உள்ளன. இதனால் விவசாயிகள் பலரும் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏரிகள், வரத்து வாய்க் கால்களை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story