ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு வேலை வழங்குவதற்காக தனி இணையதளம் தொடக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு வேலை வழங்குவதற்காக தனி இணையதளம் தொடக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 6 July 2018 9:30 PM GMT (Updated: 6 July 2018 8:07 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேலை வழங்குவதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேலை வழங்குவதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

கலந்தாய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:–

தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு கடந்த மே மாதம் 22–ந் தேதி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில், ஆலையில் உள்ள கந்தக அமிலம் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இணையதளம்

மேலும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வந்த அலுவலர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் www.thoothukudi.online என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலைபார்த்து, தற்போது வேலைவாய்ப்பற்ற ஊழியர்கள், அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் தனியார் நிறுவனத்தினரும், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பயோ டேட்டாவை பார்த்து தகுதி மற்றும் காலிப்பணியிடத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த இணையதளத்தின் வாயிலாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

எனவே, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலுவலர்கள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயோ டேட்டாவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story