தஞ்சையில், நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில், நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 10:00 PM GMT (Updated: 6 July 2018 8:43 PM GMT)

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க கோரி தஞ்சையில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,


தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. பேரவை மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், நியாயவிலைக்கடை பணியாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியமும், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், பருப்பு, பாமாயில் போன்றவற்றை நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு எடை குறைவு இல்லாமல் வழங்க வேண்டும். சேதார கழிவு 3 சதவீதம் அனுமதிக்க வேண்டும்.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகை ரூ.1,343 கோடியை தமிழகஅரசு உடனே வழங்க வேண்டும். கடைகளில் எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் சேகர், ராஜாராமன், லட்சாதிபதி, சம்பந்தம், செலவராஜ், ஆண்ட்ரூகிருஷ்டி, அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளவரசன் நன்றி கூறினார். 

Next Story