நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலும் 20 புதிய பஸ்கள் இயக்கம் கலெக்டர்-விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தனர்


நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலும் 20 புதிய பஸ்கள் இயக்கம் கலெக்டர்-விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 6 July 2018 9:48 PM GMT (Updated: 6 July 2018 9:48 PM GMT)

குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலும் 20 புதிய பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இந்த பஸ்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்துக்கு இந்த ஆண்டுக்கு 52 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 30 புதிய பஸ்களுக்கு நவீன முறையில் கூண்டு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் சொகுசு இருக்கை, தானியங்கி கதவு, அவசரநேர கதவு போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட பஸ்களாக புதிய பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த 30 புதிய பஸ்களில் 10 பஸ்களை, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த புதிய பஸ்கள் தொடக்க நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதில் நாகர்கோவில்- நெல்லை என்ட் டூ என்ட் வழித்தடத்தில் இயக்கப்படும் 20 பஸ்களில், 9 பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்பட்டன. அந்த பஸ்களில் நேற்றுமுன்தினம் முதல் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படுகிறது. மேலும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களிலேயே வழக்கமான கட்டணத்திலேயே பயண டிக்கெட் பெற்று, மகிழ்ச்சியோடு பயணம் செய்து வருகின்றனர்.


இந்தநிலையில் நேற்று மேலும் 20 புதிய பஸ்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் புதிய பஸ்களை இயக்கி தொடங்கி வைத்தனர். பின்னர் அந்த பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும், பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் புதிய பஸ்களில் ஒன்றில் ஏறி அமர்ந்து சிறிது தூரம் பயணமும் செய்தனர்.

பின்னர் விஜயகுமார் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்துக்கு 52 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 10 பஸ்களை கடந்த சில தினங்களுக்கு முன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். அதில் 9 புதிய பஸ்கள் நாகர்கோவில்-நெல்லை என்ட் டூ என்ட் வழித்தடத்திலும், ஒரு பஸ் களியக்காவிளை- வேளாங்கண்ணி வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) 20 புதிய பஸ்கள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன.

அதில் நாகர்கோவில்-நெல்லை என்ட் டூ என்ட் வழித்தடத்தில் மேலும் 11 புதிய பஸ்களும், களியக்காவிளை- வேளாங்கண்ணி வழித்தடத்தில் மேலும் ஒரு புதிய பஸ்சும், நாகர்கோவில்- திருப்பூர் வழித்தடத்தில் 2 புதிய பஸ்களும், நாகர்கோவில்- குமுளி வழித்தடத்தில் 2 பஸ்களும், கன்னியாகுமரி- ராமேசுவரம் வழித்தடத்தில் ஒரு புதிய பஸ்சும், கன்னியாகுமரி- கோவை வழித்தடத்தில் 2 புதிய பஸ்களும், கன்னியாகுமரி- மதுரை பைபாஸ் ரைடர் வழித்தடத்தில் ஒரு புதிய பஸ்சும் இயக்கப்படுகிறது. மேலும் 22 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்படும். அவற்றில் சில பஸ்கள் நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

நாகர்கோவில்- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்களில் 9 பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. நாளை (இன்று) முதல் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 20 பஸ்களும் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட இருக்கிறது. விரைவில் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுக்க வசதியாக வடசேரி பஸ் நிலையத்தில் டிக்கெட் வழங்க தனி டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும். 52 புதிய பஸ்கள் தவிர மேலும் புதிய பஸ்கள் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

பின்னர் அவர் வடசேரி பஸ் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைப்பது குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் திருவம்பலம், துணை மேலாளர் கோபாலகிருஷ்ணன், உதவி மேலாளர்கள் மதுக்குமார், மகேஷ், ரத்தினசாமி, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார், அரசு வக்கீல் ஞானசேகர், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், நகர செயலாளர் சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், வக்கீல்கள் சந்தோஷ்குமார், குரூஸ்செலின் ராணி, விக்னேஷ், இலக்கிய அணி நகர செயலாளர் சதானந்தன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story