தாமிரபரணி ஆற்றை 4-வது கட்டமாக சுத்தப்படுத்தும் பணி 19-ந் தேதி தொடங்குகிறது


தாமிரபரணி ஆற்றை 4-வது கட்டமாக சுத்தப்படுத்தும் பணி 19-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 July 2018 11:00 PM GMT (Updated: 6 July 2018 10:53 PM GMT)

தாமிரபரணி ஆற்றை 4-வது கட்டமாக சுத்தப்படுத்தும் பணி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

தாமிரபரணி ஆற்றை 4-வது கட்டமாக சுத்தப்படுத்தும் பணி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பகுதிகளை சுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்தும் பணிகள் ஏற்கனவே 3 கட்டங்களாக கல்லூரி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

4-வது கட்டமாக

4-வது கட்டமாக தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கி 21-ந் தேதி வரை ஆகிய 3 நாட்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் ஆற்று கரைப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள், ஆக்கிரமிப்புகளை எந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 21-ந் தேதியன்று கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தன்னார்வளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி 68 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளில் 50 கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகள் ஈடுபட உள்ளனர். கல்லூரி மாணவ-மாணவிகள் அந்தந்த பகுதி பொதுமக்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களையும் தூய்மை பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ், மைதிலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story