கோட்டை நோக்கி பேரணி செல்ல அனுமதி மறுப்பு: சென்னையில், சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோட்டை நோக்கி பேரணி செல்ல அனுமதி மறுப்பு: சென்னையில், சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 10:15 PM GMT (Updated: 6 July 2018 10:53 PM GMT)

சென்னை சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, கோட்டையை (தலைமை செயலகம்) முற்றுகையிடும் போராட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சத்துணவு ஊழியர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் நேற்று காலையில் இருந்தே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வந்து குவியத்தொடங்கினர்.

ஆண்கள், பெண்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

ஆர்ப்பாட்டம்

கோட்டை நோக்கி செல்லும் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.ஆண்டாள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.முருகேசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் பேயத்தேவன் உள்பட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சத்துணவு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சமூக நலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசனை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். சமூக நலத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். 

Next Story