திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தல்; 4 பேர் கைது ஆட்டோ, 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தல்; 4 பேர் கைது ஆட்டோ, 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 7:14 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் இருந்து நூதன முறையில் பயணிகள் ஆட்டோவில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர், போலீசாருடன் ஆரணி மசூதி அருகே ஆரணியில் இருந்து பனையஞ்சேரி சென்ற பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு பயணிகள் ஆட்டோ, போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்றது. உடனடியாக போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆட்டோவை சோதனை செய்தபோது, ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. மணல் மூட்டைகளுடன் அந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் புட்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக புட்லூரைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 25), பிரவீன்(26), தியாகு(26), கோதண்டன்(47) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story