கரூரில் 40 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் அமைச்சர் வழங்கினார்


கரூரில் 40 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 7:25 PM GMT)

கரூரில் 40 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப்பகுதிகளில் ரூ.90 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிட பணிகளுக்கு பூமி பூஜையிட்டும், முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து புதிய கட்டிடங்களை திறந்து வைத் தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் கரூர் நகராட்சி ராயனூர் அகதிகள் முகாம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள், செல்லாண்டிபாளையம் பகுதியில் ரூ.6½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி வெள்ளியணை சமத்துவபுரம் சாலை மேற்கு பகுதியில் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கும், வெள்ளியணை சமத்துவபுரம் சாலை கிழக்கு பகுதியில் ரூ.25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை செய்து அதனை திறந்து வைத்தார்.

இதேபோல் கரூர் மாவட்டம் தோகைமலை வட்டம் நெய்தலூர் பகுதியில் ரூ.79 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான 2 ஆய்வக கட்டிடம் மற்றும் 3 அறைகளை கொண்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்களையும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார்.

மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானிய சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது அங்கு பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுத்தொழில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் பட்டுப்புழுவினை வளர்த்து லாபம் பெறுவது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் படைப்புகள் இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கீதா, ராமர், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, லியாகத் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர அவை தலைவர் மலையம்மன் நடராஜன், முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தானேஷ், வெள்ளியணை ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் பெரியசாமி, தோகைமலை ஒன்றிய செயலாளர் கே.ஆர்.விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story