2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பந்தல் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்


2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பந்தல் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 7 July 2018 11:00 PM GMT (Updated: 7 July 2018 8:27 PM GMT)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பந்தல் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி பாரதிநகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 57). பந்தல் தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அலமேலுமங்காபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்க சென்றார். வீட்டின் முன்பு பந்தல் அமைத்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளரின் 2 மகள்களுக்கு 10, 11 வயது இருக்கும். அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த கஜேந்திரன் யாரும் இல்லாதபோது, 2 சிறுமிகளையும் வீட்டில் இருந்தஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரிடமும் கஜேந்திரன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் அவர்களை மிரட்டி உள்ளார்.

பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து கஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை நேற்று வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார்.

நேற்று இந்த வழக்கில் நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் கஜேந்திரனுக்கு 2 பிரிவுகளில் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையை ஏக காலத்தில் அதாவது 4 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும். மேலும், ரூ.4 ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கஜேந்திரன் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

Next Story