திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 8:31 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதற்கான கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

பஞ்சபூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் நகர் முழுவதும் கூட்டம் அலைமோதும்.

இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி காலை சுமார் 6.55 மணிக்கு கொடியேற்றப்பட்டது. முன்னதாக சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்பாள் மற்றும் பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர். 

Next Story